|
வரலாறு.காம் |
தென்காசி விஸ்வநாத சுவாமி கோயில் தேர்ப்பொறிப்புகள்
எஸ். இராமச்சந்திரன்
முதற் கல்வெட்டு
இடம்: நெல்லை கட்டபொம்மன் மாவட்டம், தென்காசியிலுள்ள விஸ்வநாத சுவாமி கோயிலின் முன்னர் (உலகம்மன் திரு முன்னுக்கு நேர் முன்புறம்) நிறுத்தப்பட்டுள்ள தேரின் சக்கர அச்சுகளுக்கு இடையே உள்ள 'பார்' (Bar) பகுதியில் இப்பொறிப்பு உள்ளது.
செய்தி: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஜான் பறலாண்டு பலிஷ்டோன் உத்தரவுப்படி, தென்காசி வட்டாட்சியர் சுவாமிநாத பிள்ளை தேர் செய்வித்து வெள்ளோட்டம் ஓட்டிப் பார்த்தார்.
காலம்: கொல்லம் 996 (கி.பி. 1821)
1 திருநெல்வேலி சீற்மைக்கிக் கலட்டராகி
2 ய மகாராஜா மெஸ்தர்1 ஜான் பறலாண்டு
3 பலிஷ்டோன் துறையவர்கள் உத்தரவுபடி
4 தென்காசி தாலுக்கா தாசில் சுவாமினா
5 த பிள்ளையவற்கள் தேற்முகித்து2996 வரு
6 வைய்யாசி மீ 23 உ நாயத்து கிளமை பு
7 னர்பூசம் நக்ஷ்[த்தி]ரத்தில் வெள்ளோட்டம் ஓட்டி
8 [பார்த்]தார்கள்.
1. மிஸ்டர், மகாராஜா ஆகிய அடைமொழிகள் கோயில் நிர்வாகம் உள்நாட்டு
அரசர்கள் கையிலிருந்து ஆங்கிலேயர் வசம் மாறிவிட்டமையை உணர்த்தும்
கி.பி. 1820 இல் சர். தாமஸ் மன்றோவின் நிலவருவாய் நிர்வாகச் சீரமைப்பு
முறைப்படி கோயில் நிலங்கள், சொத்துகள் ஆகியன கணக்கெடுக்கப்பட்டு
வரையறை செய்யப்பட்டன.
2. முடித்து என்பதன் நெல்லை மாவட்ட உச்சரிப்பு.
இரண்டாம் கல்வெட்டு:
இடம்: தேர் வடம் கட்டும் வளையம்.
செய்தி: சங்கர நாரயண சுவாமிகள் உபயம்.
காலம்: கி.பி. 1834 ஆகலாம்.
1 விசைய வரு தை மீ 5 நல்ல
2 நாள் திரு சுவாமிகள் சங்கர
3 நாராயண[ன்] உலகம்மனுக்கு
4 உபயம்